Friday, February 23, 2018

தமிழ்ப் பக்தி புலவர் ஆண்டாள் யார்?


தந்தி தொலைக்காட்சி வரலாறு பேராசிரியர் எம். ஜி. நாராயணனிடம் எடுத்த பேட்டி அடங்கிய‌ யு ட்யூப் காணொளி இணைப்பை தன் திண்ணைக் கட்டுரையில் திருமதி சாரநாதன் கொடுத்தமைக்கு நன்றிகள் பல.  ஆனால் பேராசிரியர் சொன்னதை தங்கள்தங்கள் வசதிக்குத் தக்கவாறு எடுத்துக்கொள்கிறார்கள்.

பேராசிரியர் நாராயணன் சொல்வது:  தானும் தன் மாணாக்கன் கேசவனும் சேர்ந்தளித்த கட்டுரையே அது.  ஆண்டாள் திருவரங்கத்தில் வாழ்ந்த தேவதாசி என்று எந்த ஆதாரத்தை வைத்துச் சொன்னீர்கள் ? என்ற கேள்விக்கு:  “ 7-8 நூற்றாண்டுகளில் தமிழக கோயில்களில் தேவதாசி குடும்பங்கள் வாழ்ந்தன.  அக்குடும்பத்துப் பெண்கள் தங்களை இறைவனுக்கு அர்ப்பணித்து தேவதாசிகளாக வாழ்ந்தார்கள்.  சரி! அப்படி தேவதாசிகள் உண்மையில் இருந்தார்கள் என்பதற்கு ஏதேனும் நிரந்தர ஆதாரங்கள் (கல்வெட்டுக்கள்; இலக்கிய சான்றுகள்) உண்டா? என்று கேட்டதற்கு (இதை அழுத்தி திரும்பத்திரும்ப நிருபர் கேட்கிறார்: அவரின் உள்ளோக்கம் ''இல்லை'' என்ற சொல்லை உருவ‌ அதுவே தலைப்புமாக தந்தி காணொளி வைக்கிறது!) நாராயணன் பதில்:  ‘’அப்படியெல்லாம் சானறுகள் இல.’’  பின் எதை வைத்துச்சொல்கிறீர்கள்? என்ற கேள்விக்கு: ‘’வழிவழி வந்த வாய்சொல்படி (oral tradition) என்பது நாரயாணன் சொல்லிங்கே) மற்றும் கர்ண பரமபரை வ்ரலாறு (Legends) என்பது நாராயணன் வைக்கும் சொல் இங்கே)  இதன்படி அப்படி அனுமானம் செய்ய (நாராயணன் வைக்கும் சொல் Interpretations) முடிகிறது’’.

இக்காணொளியில் நாராயணன் தன் இன்டர்ப்ரடேஷனை மறுக்கவேயில்லை. மேலும் சொல்கிறார்: ஆய்வுகள் நான் காட்டிய வழியில் தொடர்கின்றன என்று முடிக்கிறார்.

நாராயணன் போன்றவர்களாவது வாய்வழி வந்த பாரம்பரியம் (oral tradition), மற்றும் கர்ண பரம்பரை நம்பிக்கை (Legend) இவற்றை வைத்துப் பேசி இன்னும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன இவ்வழியே என, இங்கு எழுதும் திருமதி சாரநாதன் மற்றும் அவர் ஆதாரவாளர்கள் வைக்கும் ஆதாரங்கள் பெரியாழ்வாரின் பாசுரமும் மற்றும் விட்டுச்சித்தன் மகள் கோதை சொன்ன என்று முடியும் தனியனகளுமே ஆகும். 

எடுத்து வளர்த்த மகளை எவரும் 'எடுத்து வளர்த்த மகள்என்று எப்போதும் சொல்ல மாட்டார்கள்;  மகள் என்றே சொல்வார்கள்.  குழந்தைக்காக ஏங்கிய பெரியாழ்வார் பச்சை மதலையாகக் கண்டெடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்து விட்டு, ‘’எடுத்து வளர்த்த மகள்’’ என்று விட்டேத்தியாக பேசுவாரா

குருபரம்பரா பிரபாவம் சொன்ன வரலாறு என்னவெனில் பெரியாழ்வார் அவரின் நந்தவனத்தில் தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்ட ஓர் குழந்தை; அதற்கு ஆண்டாள் எனப் பெயரிட்டு வளர்த்தார்.  இதுவே.  இதை வைத்தே பெரியாழ்வாரின் பாசுரத்தின் மகள் என்ற சொல்லை பார்க்கவேண்டும்.

திருப்பாவைக்கும் நாச்சியார் திருமொழிக்கும் ''தனியன்கள்'' எழுதியது ஆண்டாளே என்பது வேடிக்கையான பேச்சு!  ஏனெனில் வைணவ சம்பிரதாயமே தனியன்களை எழுதியவர்கள் ஆச்சாரியர்களே என்று சொல்கிறது.  இவ்வுண்மையை என் திண்ணைக்கட்டுரையில் காட்டியிருக்கிறேன்.

ஆக, ஆண்டாள் பெரியாழ்வாரருக்குப் பிறந்த குழந்தை என குருப்ரம்பரா பிரபாவமே சொல்லவில்லை.  பாசுரங்களும் சொல்லவில்லை.  நாராயணன் சொல்லும் இன்ட்ரப்ரடேஷனைத்தான் வைரமுத்துவும் செய்கிறார்.  அதை அவரே பண்ணியிருக்க வேண்டும்.  நாராயணன் சொன்னதாகச் சொல்லாமல். 

வரலாற்றாய்வாளர்கள் பலவகைத் தரவுகளைத் தேடுவார்கள்: கல்வெட்டுக்கள்; நாணயங்கள்; புதையுண்ட நகரங்கள்; ஊர்கள் (கீழடி போன்று).  இவைக்குப் பின் அக்கால கட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள்.  சங்க காலத்தில் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிய பிற சான்றுகள் கொஞ்சமே;  எனவே சங்கப்பாடல்களை வைத்தே ஆராய்கிறார்கள்.

இதே நிலைதான்: ஆழ்வார் காலத்துக்கும்.  ஆழ்வார்கள் யாரார்? எப்படி, எங்கே வாழ்ந்தார்கள்? என்ற கேள்விகளுக்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்கள் அரிது.  எனவே அவர்கள் பாடல்களில் தேடவேண்டிய நிலை வருகிறது.  ஆண்டாள் காலமெது? என்ற ஆராய்ச்சியையே அன்னாரின் பாடல்கள் மூலமாகத் தேடி திருவாங்கூர் பலகலைக்கழக தமிழ்ப்பேராசிரியர் மு இராகவையங்கார் எழதிய ஒரு சிறப்பான நூல் '' ஆழ்வார்கள் காலநிலை'' .   கல்விக்கடல் கோபாலைய்யர் ஒரு மாபெரும் வைணவ அறிஞர்; அவர் எழுதியதை (''எம்பெருமானாரும், திருவாய்மொழியும்''  - கல்விக்கடல் கோபாலைய்யர்.  கலா சம்பரக்சன சங்கம், செல்வம நகர், தஞ்சாவூர் உருபா 35 மட்டும்.) மேலும், தமிழ் மண் பதிப்பகம், சிங்காரவேலர் தெரு, தி நகர் சென்னை வெளியிட்ட இவரின் கட்டுரைத்தொகுப்புக்கள் நான்கு) அடிப்படையாக வைத்தே என் திண்ணைக்கட்டுரை வரையப்பட்டது. இவர், ஆழ்வார்களில் பாடல்களின் காணப்படும் சொல்லாடல்களை வைத்து அக்காலத்தில் தமிழரின் சமூக வாழ்க்கைப் பழக்கங்கள் இவை காட்டுகின்றன‌ என சொல்வதும் இரசிக்கதக்கது. தன்னை தலித்து என்று திருமழியிசையாழ்வாரே பாடலில் சொல்லிவிட்டதாலே அவரின் ஜாதியை குலத்தை (அவர் சொல்லின்படி ''குலமில்லா’’ கீழ்நிலையை) நாம் அறிகிறோம்.  அதே சமயம், இன்னொரு தலித்து என்று ஏற்கப்படும் திருப்பாணாற்றாழ்வாரின் ஜாதி அவரின் பாடல்களில் காட்டப்படவில்லை. பாடல்கள் பத்தே பத்து.  வைணவ ஆச்சாரியார்கள் சொல்லி அவரை தலித்து என்கிறார்கள் வைணவர்கள்.  குருபரம்பரா பிரபாவம் ஒரு வரலாற்று நூல் இல்லையெனபதால் அவரை தலித்து என்பதற்கு ஆதாரமேயில்லை. எனவே ஆழ்வார்கள் பாடல்களே தரவுகள்

ஆழ்வார்கள் காலத்துக்குப் பின் பல நூற்றாண்டுகள் சென்ற பின் எழுதப்பட்ட நூலே குருபரம்பரா பிரபாவம்.  இது எழுதப்பட்ட நோக்கம் ஆழ்வார்களின் வாழ்க்கையை வரலாற்று ஆராய்ச்சியாகச் சொல்ல அன்று. மாறாக, ஆழ்வார்கள் வைணவ சம்பிரதாயத்தில் வைக்கப்பட்ட பின்னர் அவர்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தவே.  கொஞ்சம் கற்பனை பண்ணுங்கள்:  இப்பன்னிரு ஆழ்வார்கள் வெறும் திருமால வழிபாட்டாளர்கள்; தங்கள் பக்தியை பாடல்களாக வெளிப்படுத்தினார்கள் என்றுமட்டும் விடப்பட்டு, வைணவ சம்பிராதாயத்தில் வைக்கப்படாமல் போயிருந்தால், குருபரம்பரா பிரபாவமே எழுதப்பட்டிருக்காது.  தேவையேயில்லாமல் எவரெழுதுவார்?

எனவே ஆழ்வார்கள் அனைவரும் அவதாரங்களாக்க வேண்டிய கட்டாயமேற்பட்டது.  பூதேவியின் அவதாரமே ஆண்டாள் என்பது குரு பரம்ப்ரா பிரபாவம் சொன்னது.  வரலாற்றாசிரியர்கள் குருபரம்பரா பிரபாவத்தை எடுப்பதே இல்லை. அது ஒரு ஹேகியோக்ராஃபி (Hagiography) என்று நன்கு தெரிவதால்.  ஹேகியோக்ராஃபிகள் மதத்தலைவர்கள்; பக்தர்கள்; மகான்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும் நோக்கத்தில் தங்கள்தங்கள் மதத்தவராலேயே எழுதப்படுபவை.  கத்தோலிக்கத்தில் புனிதர்கள் வரலாறு கத்தோலிக்க சபையால் எழுதப்பட்டது.  அது வரலாற்று ஆதாரமாகாது. அதே போல குருபரம்பரா பிரபாவம் வரலாறு அன்று.  வைணவர்களுக்காகவே எழுதப்பட்ட பக்திப்பனுவலது.  அப்படியே ஒரு வரலாற்றாசிரியர் எழுதினாலும் அதை மதம் ஏற்காது.

ஆண்டாளின் வரலாறு, இறுதியாக அவரின் பாடல்களின் இருந்தே தெரிய வேண்டும். அங்கேதான் வருகிறது இன்ட்ர்ப்ரெடேஷன்.  அதை எல்லாரும் அவரவருக்கு இயன்ற வரை செய்ய முடியும்.  பெரிய தமிழறிஞரும் இலக்கிய ஆர்வமும் உடையவராயிருந்தால் அதை நன்கு செய்ய முடியும்.  வைரமுத்து சொல்லியபடியே சொன்னால், வைணவர்களோ, இந்துமத பற்றாளர்களோ இதைச் செய்ய முடியாது.  அவர்களுக்கு வேண்டியது ஹேகியோக்ராஃபிதானே? வரலாறு எதற்குமற்றவர்கள்:  ஆணாதிக்க சிந்தனை பற்றி ஆராய்வோர் (இங்கு நாம் ஒரு முற்கால பெண் புலவரைப்பற்றி தெரிய விரும்புவதால்); சமய, சமூக மறுப்பாளர்கள் என்பது அவர் சொல்; அதை மாற்றி எச்சமயத்தையும் சாராதவர்கள்; கசப்போ, கரிப்போ, தனக்கு என்ன தெரிய வந்தது என்பதை காய்தல் உவத்தலின்றி தைரியமாகச் செய்வார்கள்.  எல்லாருக்கும் உரிமை உண்டு. 

ஆராய்ச்சிகள் இதை ஒரு கோடாகக் கொண்டு தொடரட்டும் என்று பேராசிரியர் நாராயணன் சொன்னதைப்போல நாமும் நம்புவோமாக.


*****

Tuesday, January 16, 2018

தமிழ் இலக்கியமும் மதவாதிகளும்

தமிழ் இலக்கியமும் மதவாதிகளும்


தமிழ் இலக்கியம் - சங்க காலம்சங்கம் மருவிய காலம்; காப்பிய காலம்; பக்தி இயக்க காலம்; சிற்றிலக்கிய காலம் விடுதலை போராட்ட காலம்; விடுதலை பெற்ற காலம்தற்காலம் - என்று தனித்தனியே ஒன்றன்பின் ஒன்றாக‌ வளர்ந்து வந்திருக்கிறது.   இவற்றுள் மாபெரும் சிறப்பு வாய்ந்த நூல்கள் பலபல‌.  பக்தி இயக்க கால இலக்கியம் சமய இலக்கியமெனப் போற்றப்பட்டு, தமிழ்மொழியின் இலக்கிய கட்டமைப்பு அடிக்கற்களுள் ஒரு பெரிய அடித்தளமாக விளங்குகிறது.  இக்காலப் பாடல்கள் இந்துக்கடவுளர்களாகிய சிவனையும் திருமாலையும் தனித்தனியாக போற்றிப்பாடப்பட்டவை.  இவர்கள் எத்தனை எத்தனை புலவர்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால். இவர்களுள்  சமயக்குரவர் நால்வர் என்ற சிவனைப்பாடிய சைவப்புலவர்களும்; ஆழ்வார்கள் எனவழைக்கப்படும் வைணவப்புலவர்கள் பன்னிருவரும் இன்று சமய இலக்கியம் யாத்தவர்கள் எனவறியப்படுகின்றனர். 

எல்லா கால இலக்கியநூல்களும் தமிழரின் இலக்கிய பெட்டகங்களாக போற்றப்பட்டு வாசிக்கப்பட்டு வருகின்றன.  உலகமெங்கும் வியாபித்துள்ள தமிழர்கள் - மதம், சாதி கடந்து - அனைத்து கால இலக்கியத்தை த‌ம் முன்னோர் விட்டுச்சென்ற விலைமதிக்க முடியா சொத்து, பிறமொழிகளில் இப்படி கிடைக்காதென்றெல்லாம் பெருமைப்பட்டு தமிழின்பத்தை நுகர‌ வழி செய்கிறது. 

பக்தி இலக்கியத்தின் இன்றைய நிலையென்னசைவக்குரவர்கள் யாத்த தேவாரம், திருவாசகம் சர்ச்சைக்குள்ளாகவில்லை. ஏனென்று என்னை வாசிக்கும்போது புலப்படும்.  வைணவப்புலவர்கள் யாத்த 4000 க்கும் மேற்பட்ட பாடல்கள் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

7ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வாழ்ந்த ஏராளம் திருமால் வழிபாட்டுப் புலவர்கள் அனைவரும் எழுதியவை எங்கே போயின‌? தெரியவில்லை.  ஆனால் அவர்களுள் பன்னிருவர் யாத்தவை இன்று கிடைக்கின்றன.  காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த ஒரு வைணவ ஆசிரியர் பன்னிரு புலவர்கள் எழுதியவைகளைத் தொகுத்தார்;  இது நடந்தது 10ம் நூற்றாணடு.  அதாவது பன்னிரு புலவர்களுள் கடைசிப்புலவர் வாழ்ந்த காலம் 9ம் நூற்றாண்டு.  அவருக்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்து இப்பாடல்கள் ஒரே தொகுப்பில் வைக்கப்பட்டன.  எப்புலவரின் பாடல்கள் முதலில் வைக்கப்படவேண்டுமென்று என்ற வரிசையும் இத்தொகுப்பாளரால் முடிவு செய்யப்பட்டது.  இப்பாடலகளை அவர் தொகுக்க ஒரே காரணம் அல்லது முதற்காரணம் பன்னிருவரும் திருமாலையே முழமுதற்கடவுளாகக் கொண்டு வேறெந்த தெயவத்தையும் ஏத்தாமல் பாடியது.  பக்தி இயக்க காலத்தில் இப்படி ஒரே கடவுளை (திருமாலை) எடுத்துப் போற்றிப் பாடியவர்கள் இவர்கள் பன்னிருவர்தான் போலும்! அல்லது இவர்கள் மட்டுமே தொகுப்பாளருக்கு கிடைத்திருக்க வேண்டும்.  அன்று வாழ்ந்த - 7லிருந்து 9ம் நூற்றாண்டுவரை - ஒரு பன்னிருவர் மட்டும்தான் திருமாலையே ஏத்திப்பாடினராஇருக்கவே முடியாது. திருமால் வணக்கம் தமிழ்மண்ணில் தொன்மையாக இருக்க (மாயோன் மேய காடுறை உலகம் என்பது தொல்காப்பியம். மாயோன் என்பவன் தமிழ்க்கடவுள் அதாவது திருமால்.) ஒரு பன்னிருவர் மட்டும்தான் கிடைத்தனராபுரவலர் இல்லாவிட்டால் மாபெரும் புலவனும் மண்ணில் காணாமல் போவான் எனபது ஆங்கிலப்பாவலன் கிரே ''ஒரு கல்லறைத்தோட்டத்தில் பாடிய இரங்கற்பா''' என்ற கவிதையில் சொல்கிறான்.   கம்பருக்கும் கூட ஒரு திருவெண்ணைநல்லூர் சடையப்பச் செட்டியார் புரவலராக இருந்ததனால் இன்று நம்மிடையே வாழ்கிறாரன்றோ!  செட்டியார் இல்லையென்றால் கம்பராமாயணம் இல்லை :-) இப்பன்னிருவருக்காவது ஒருவர் கிடைத்தாரே என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ளலாம்.

பின்காலத்தில் ஒரு வைணவத்தலைவர் வந்தார். அவர் பெயர் இராமானுஜர். அவர் இந்துமதத்தில் ஒரு தத்துவத்தை உருவாக்கினார். அதன்பெயர் விசிஷ்டாத்வைதம்.  இது சங்கரரின் வேதாந்தத்திலும் சிறிது விலகியது; ஆனால் அவ்விலக்கமே புதிய தத்துவத்தின் உயிராகும்.  இவர் தன் தத்துவம் முன்சென்ற தொகுப்பாளரின் பாடல்களில் ஒலிக்கக்கண்டார்.  அப்பாடல்களின் மேல் தன் தத்துவத்தை ஏற்றி, அப்பன்னிருவருள் எவரின் பாடல்கள் தத்துவங்களை வெகுவாக‌ உள்ளடக்கியதே அவரையே அப்பன்னிருவரின் முதல்வராக்கினர். அவர்தான் நம்மாழ்வார். வைணவர்கள் என்ற குலத்துக்குத் தலைவர் எனவே குலபதி நம்மாழ்வாரே. இவர்கள் ஆழ்வார்கள் எனவழைக்கப்பட்டனர். திருமால் பக்தியில் ஆழங்கால் பட்டு தம்மை மறந்த நிலையில் பாடல்கள் எழுதினார்கள் எனவே ஆழ்வார்கள் என்ற பேர்.  இவர்கள் பாடல்கள் அனைத்தையுமே தம் புதிய மதத்தின் வழிபாட்டில் கட்டாயமாக்க, இப்பாடல்களின் புகழ் மென்மேலும் பெருகியது; அல்லது வெளித்தெரிந்தன‌.பின்னர் இராமானுஜர் செய்கைகள். வகுத்த கோயில் வழிபாட்டு முறைகள்; இப்பாடல்களுக்கு தன் சீடர்கள் சிலரை வைத்து எழுதிய விளக்கவுரைகள் - எல்லாமே சேர்ந்து வைணவ சம்பிராதாயம் என்ற பெயரில் உள்ளடக்காமானது.  மேலும் - நம்மாழ்வாரின் நான்கு நூல்கள் நான்கு வேதங்களில் சாரங்களென்றும்திருமங்கையாழ்வாரின் ஆறு நூல்கள் வேதங்களின் ஆறங்கங்களெனவும், ஏனைய ஆழ்வார்கள் எண்மர் நூல்கள் எட்டு உபாங்கஙகளெனவும் - அல்லது ஒத்த சிறப்புடையவை - என்பது ஆசாரிய சூர்ணிகை.  வைணவர்களுக்குச் சொன்னது.  விளக்கங்கள் - அல்லது வியாக்யானங்கள் - எழதிய இராமானுஜரின் சீடர்கள் - மற்ற வைணவ ஆசிரியர்கள் - இப்படி வேத சாரங்கள் எனபதை வலுப்படுத்தினார்கள். இராமாயணம், மஹாபாரதத்தோடு இணைத்து விளக்கங்கள் கூறினார்கள்.  ஆழ்வார்களில் நம்மாழ்வார் தத்துவஞானி என்றேன். எனவே அவரின் திருவாய்மொழி விளக்கத்தைப் பெறுவதில் முதலிடம் பெற்று புகழடைந்தது.  இதைக்கவனித்த பிராமணல்லாதோர் தாமும் விளக்கம் கொடுத்தனர். அவை 'தமிழர்' விளக்கம் எனவாயிற்று.  வைணவ ஆசாரியர்கள் (பிராமணர்கள்) கொடுத்தவை ''படிகள்'' எனவழைக்கப்பட்டன. மேற்சொன்ன வைணவ சம்பிரதாயம், படிகளையே ஏற்றது.  ஆனால் அப்படிகள்  மிகவும் கடினமான மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டன.  மேலும் தனியன்கள் எனவழைக்கப்படும் பாடல்களையும் இப்புலவர்களின் பாடல்களோடு இணைத்தார்கள் வைணவ ஆசிரியர்கள் தாமே எழுதி..  தனியன் என்பது சிறப்புப்பாயிரம்.  இது வடமொழியிலும் தமிழிலும் யாக்கப்பட்டு இணைக்கப்பட்டது.  திருவாய்மொழிக்கும், பெரிய திருமொழிக்கும் கண்ணிநுண்சிறுத்தாம்புக்கும் இருமொழிகளிலும் தனியன்கள் சேர்க்கப்பட்டன.  உய்யக்கொண்டார் திருப்பாவைக்கும், திருக்குருகை காலப்பன் பேயாழ்வார் திருவ்ந்தாதிக்கும், மணக்கால் நம்பி பெருமாள் திருமொழிக்கும்  எழுதினார்கள். இராமானுஜர் வந்த காலத்தில் முழுத்தொகுப்புக்கும் தனியன்கள் எழுதப்பட்டு முடிந்ததுஇராமானுஜருக்குப் பின், 14ம் நூற்றாண்டில் ஒரு வைணவ ஆசிரியர் இப்பன்னிரு புலவர்களையும் தெய்வநிலைக்கேத்தினார். பெண்பால் புலவரை திருமாலின் மனையாட்டியின் (பூதேவி) அவதாரமாக்கினர்; ஆண்பால் புலவர்களையும் திருமாலின் திருமேனி, மற்றும் திருமால் ஆயுதங்கள், போன்றவைகளிலிருந்து அவதரித்தோர் என்றாக்கினார். இப்புலவர்கள் வாழ்க்கை வரலாறு இவ்வாறாக 500 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்படுகிறது குருபரம்பரா பிரபாவம் என்ற நூலாக‌.  இது வைணவ சம்பிராதயத்தின் அடிக்கல்லாகி திகழ்கிறது.  ஆக, சம்பிரதாயத்தை இராமானுஜர் மட்டுமன்று; பிறரும் வலுப்படுத்தினார்கள்

மெல்ல மெல்ல பன்னிரு தமிழ்ப்புலவர்களும் பெருவாரியான தமிழ்மக்கள் கூட்டத்தினரிடமிருந்து விலக்கப்பட்டு, சிறுவாரியான வைணவத்தமிழ்க்கூட்டத்தில் சென்றடைந்தார்கள். ஆயர்பாடியிலிருந்து அக்ரஹாரத்துக்குள் சென்றடைந்தாள் ஆண்டாள்; அல்லது அடைக்கப்பட்டாள். தமிழரின் பொதுச்சொத்தான இப்பன்னிரு புலவர்களும் ஒரு சிறிய கூட்டத்தின் தனிச்சொத்தாக்கப் பட்டதை.  தவறென்று சொல்லவில்லை; விளைவு ஒருவருக்கு இலாபம்; இன்னொருவருக்கு நட்டம் என்பதுதான் காட்டப்படுகிறது. உண்மையென்னவென்றால், தனியன்களுக்கு மட்டுமே இவ்வைணவர்கள் சொந்தக்காரர்கள். ஆழ்வார் பாடல்கள் யாராருக்குச் சொந்தம் என்பதே கேள்வி. அதாவது, இப்பாடலகளை மற்றவர் வாசிக்கலாம். ஆனால் அவை பெரும்பக்தியோடே வாசிக்கப்பட வேண்டும்; போற்றப்படவேண்டும். இதை எப்படி எல்லாத்தமிழரும் செய்ய முடியும்அவை தமிழ் இலக்கியத்தின் சிறப்பான பாடல்கள் என்றுதானே வாசிக்க முடியும்மேலும் அப்பாடல்களில் சொல்லப்பட்டிருப்பது எவையெவைஎன்பதை அவரவர் விருப்பத்திற்கேற்ப சொல்லிவிட முடியாது.  அப்படியே சொன்னாலும், அது வைணவருக்கு அதிர்ச்சியைத்தரக்கூடாது.   இப்பாடல்கள் நமக்கு என்ன சொல்கின்றன? அவைகளின் இறைச்சிகள் யாவை? என்பனவெல்லாம் வைணவர்கள் விருப்பப்படிதான் இருக்க வேண்டும்.  தடியெடுத்தவெனெல்லாம் தண்டல்காரன் ஆகக்கூடாது என்பது எழுதாக்கட்டளை;.  எட்டுகோடி தமிழ்மக்களுக்கா? இவர்களுக்கு மட்டும்தானா? என்பதுதான் சங்கடமான கேள்வி.

பக்திப் பாடல்கள் பக்தி இலக்கியமாக்கப்பட்டு, ஒரு மதக்கூட்டத்துக்கு மட்டுமே என்ற நிலையில்தமிழரின் பொதுச்சொத்து - புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டுவிட்டு, பட்டாவையும் அள்ளிக்கொண்டது போல‌ -  பறி போனது!.    இதே நிலை தொடர்கிறது. இந்நிலையின் நீட்சியே வைரமுத்து கிளப்பிவிட்ட சர்ச்சை.  இப்புலவர்களின் பாடல்களை வாசிக்கலாம்.  இவர்களின் வாழ்க்கையை (அப்பாடல்கள் மூலமாக)  ஆராயவே கூடாது.  ''குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன். நலங்களாய நற்கலைகள் நாவிலும் நவின்றிலேன்'' என்று ஏன் சொல்கிறார்? என்று கேட்கக்கூடாது.  சத்தம் காட்டாமல் வாசித்துவிட்டு வெளியே செல் என்று நூலகத்தில் செய்வது போல.  உனக்குரிமை இல்லவே இல்லை உன் விருப்பப்படி புரிய.  ‘' பாடல்களுக்கு பொழிப்புரை, பதவுரை, விளக்கவுரை எல்லாமே நாங்கள் எழுதிவைத்தவையேசிறிது விலகினாலோ எம்மனங்கள் புண்படும்!’’ 

நல்லவேளை, கம்பரின் காலம் இராமானுஜருக்குப் பின்.  எனவே அது வைணவ சம்பிரதாயத்தில் சேர்க்கப்படவில்லை.  கம்பராமாயாணம் ஒரு வைணவநூல்.  கம்பர் ஒரு பழுத்த வைணவர்.  திருவரங்கத்தில் அல்லவா இந்நூல் அரங்கேறியது!  எனினும் இது வைணவ சம்பிராதாயத்தில் சேர்க்கப்படவில்லை.  அதாவது கட்டாயம் ஆராதனையில் ஓதப்படவேண்டிய அவசியமில்லை. கம்பராமாயாணத்தை கம்பர் முழுமை செய்தாரா? இராமனை பிராமணனாக்கினாரா? என்றெல்லாம் கம்ப்ராமாயணத்தைப் பற்றி, பின்னர் கம்பரின் வாழ்க்கை பற்றியும் - கம்பரை ஏன் நாட்டைவிட்டு துரத்தினான் சோழன்? ஒட்டக்க்கூத்தருக்கும் இவருக்கும் என்ன பிரச்சினை? கம்பரின் மகன் சோழ இளவரசியை கவரப்பார்த்தானா? இல்லை அம்பிகாபதி என்ற பாத்திரமே புனைவா? என பலபல எல்லா வகை கேள்விகளையும் விமர்சகர்களும் பொதுமக்களும் வைக்கலாம்.  இந்துக்கள், குறிப்பாக வைணவர்கள் ஒன்றும் சொல்வதில்லை.  எனவேதான் ஒரு முசுலீம் அறிஞர் (மறைந்த நீதிபதி மு மு இசுமாயில்) கம்பராயாணத்தை ஆராய்ந்து ஒரு நெடுந்தொடரை வாராவாரம் ஆனந்த விகடனின் எழுத முடிந்தது.   ''கம்பனின் மறுபக்கம்'' என்ற விமர்சனத்தை புலவர் ஆ.பழநியால் வைக்க முடிகிறது.@

கம்பர் பிழைத்தார்.  பன்னிரு தமிழ்ப்புலவர்கள் மாட்டிக்கொண்டார்கள். 

@   ''கம்பரின் மறுபக்கம்''  புலவர் ஆ.பழனி (2016)  New Century Book House (P) Ltd. Rs.140/-  ( It's available in the ongoing Book Fair 2018 Chennai)

Friday, December 22, 2017

விருதும் விமர்சனமும்

    இன்குலாப் என்ற தமிழ் எழுத்தாளர் எழுதிய கவிதைத் தொகுப்பொன்றுக்கு சாகித்ய அகாடமி விருது இந்தாண்டு அளிக்கப்படுகிறது.  இருநாள்களுக்கு முன் வந்த செய்தி இது. 

     இவ்விருதைப் பற்றி இன்னொரு தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் என்பவர் எழுதியது இங்கே:

''இன்குலாப் இலக்கியத்திற்கான சாகித்ய அக்காதமி விருதைப் பெற்றிருக்கிறார் .வழக்கம்போல வானம்பாடிகள் வரிசைகட்டி விருதுபெறுவதைப் போலத்தான் இங்குலாபுக்கு அளிக்கப்பட்ட விருது. தீவிரஇடதுசாரிகள் சுவரில் எழுதிப்போடும் கோஷங்களின் தரம்கொண்டவை அவருடைய வரிகள். தேய்வழக்குகளை மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருந்தவர். ஒருவரியேனும் கவிதையென எழுதியவர் அல்ல.

இந்த முற்போக்கு இவரைப்போன்ற கல்லூரி ஆசிரியர்கள் அக்காலத்தில் கொண்ட ஒரு பிரத்யேகவகையான நடிப்பு. கவிதை அக்கவிஞனின் அந்தரங்கநேர்மையின் ஒலி. இங்குலாப் அந்தப்பெயரில் ஒளிந்துகொண்ட வழக்கமான கல்லூரி ஊழியர், அவ்வளவே.இன்குலாப் அவருடைய லாபியால் நோபல் வாங்கியளிக்கப்பட்டாலும் கவிஞரோ இலக்கியவாதியோ ஆவதில்லை. அவரைத்தெரிவுசெய்த நடுவர்களுக்கு இலக்கியமென்பது என்ன என்று தெரியவில்லை என்பதைத்தவிர இவ்விருதால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

ஆனால் காலமெல்லாம் இந்திய அரசெதிர்ப்பாளராக பாவனைசெய்தவருக்கு அளிக்கப்படும் சாகித்ய அக்காதமி ஒருவகையில் அவர் ஒங்கிக்கூச்சலிட்ட அனைத்து புரட்சிகளையுமே காலிசெய்வது என்பதை அவருக்காக உழைத்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அல்லது அவர்கள்தான் சரியாகப்புரிந்துகொண்டிருக்கிறார்களோ? அவர் ஏங்கியதே இதைத்தானோ?''

        படைப்பிலக்கியத்திற்காக இன்குலாப் என்ற கவிஞருக்கும்,  மொழிப்பெயர்ப்புக்காக யூமா வாசுகி @ மாரிமுத்துவுக்கும் இவ்வாண்டு விருதுகள்.  யூமா வாசுகியைப் பாராட்டி எழுதிவிட்டு, பின் குறிப்பாக மேலே கண்டதை எழுதியிருக்கிறார்.  யாரும் எப்படியும் எழுதலாம். சரிதான்.  ஆனால் மாரிமுத்துவின் நிலை எப்படி இருக்கும் இதைப்படித்தால்?  நம்மைப்பற்றி எழுதாமலே விட்டிருக்கலாம்.  அல்லது நாந்தானா கிடைத்தேன் இன்னொரு எழுத்தாளரை வசைபாட?

      இத்தனைக்கும்  இன்குலாம் ஒரு மறைந்த கவிஞர்.

Monday, December 11, 2017

ஒரு தமிழ்ச்சிறுகதை; ஒரு விமர்சனம் - யுக சந்தி

                                   ஒரு தமிழ்ச்சிறுகதை; ஒரு வாசிப்புணர்வு..

ஓர் எழுத்தாளரின் அனைத்துக் கதைகளையும் ஒட்டுமொத்தமாக வாசித்து அவரின் எழுத்தாள ஆளுமையைக் கணிக்கும் வழக்கம் பொதுவாக இலக்கியவாதிகள் செய்வது.  எழுத்தாளர் யாரென்றே சட்டை பண்ணாமல் ஒவ்வொரு கதையும் தனித்தனியாக வாசித்து நகர்வோர் பலர். ஒரு சிறுகதையை வாசிக்கும்போது எழுத்தாளரின் பிம்பம் நம் மனத்தை ஆக்கிரமிக்கக் கூடாது. அவரின் முந்தைய கதைகளை வாசித்திருந்தால், ஒரு புதுக்கதையை வாசிக்கும்போது நம் சிந்தனையில் அவை இருக்கக்கூடா. எழுத்தாளன் எவ்வளவு பெரிய ஆளுமையாக பலரால் கருதப்பட்டாலும் அவ்வாளுமை நமக்கு தற்போது வாசிப்பில் தேவையேயில்லை. எழுத்தாளனின் ஆளுமைஅவனின் முந்தைய கதைகளின் நினைவுகள் -  கையிலிருக்கும் கதை வாசிப்பை புதிதாக வாசிக்கிறோமென்ற‌ உணர்வை சிதைத்துவிடும். புதிய கதைக்கு புதிய மனத்தோடு வருவதே சரி.  

ஜெயகாந்தனின் ‘’யுகசந்தி’’ சிறுகதையை இணைய வலைபதிவில் வாசித்தேன்.  http://www.valaitamil.com/yuga-santhi_7845.html

ஜெயகாந்தன் எடுத்துக்கொண்ட கதை நிலைக்களம் தமிழ்ப்பார்ப்பனர்கள் வாழ்க்கை. அவர்கள் பிராமண ஆசார வாழ்க்கையைக் கொண்டதால் இக்களம் பிராமணர்கள் வாழ்க்கை.  

விதவைகளை ஆசாரத்துக்குள்ளாக்கி – மொட்டையடித்து, நகை நட்டுக்களை அவிழ்த்துவிட்டு, காவி உடையில் வீட்டுக்குள்ளேயே வாழ்க்கையை அமைப்பது; அவர்கள் அமங்கலச்சின்னங்கள் என எடுப்பது பிராமண வாழ்க்கை. இங்கே மொட்டையடிப்பதும் காவி உடையும் மட்டுமே பிற சாதி மக்களிடமிருந்து மாறுபடுகின்றன.  மற்றபடி அவர்கள் விதவைகளும் நகை நட்டுக்களணியாமல் வெள்ளைச்சீலையணிந்த அமங்கலச் சின்னங்களாகவே நடாத்தப்படுகிறார்கள் இன்றும். 

அன்றும் இன்றும் மாறாதபடி இந்து விதவைகள் எல்லா சாதிகளிலும் அமங்கலச்சின்னங்களாக‌ தமிழ்ச்சமூகம் காட்டும் என்ற‌ நிலையிருக்க பிராமண விதவையை கதாமாந்தராக வைத்து என்ன சிறப்பாக காட்ட முடியுமென்று எனக்குத் தெரியவில்லை. பல எழுத்தாளர்கள், சினிமா இயக்குனர்களுக்கு பிராமண-ஈடுபாடு இருக்கிறது.  பிராமணர்கள் கூட அவர்கள் வாழ்க்கையில் பிரச்சினையான விசயங்களைப் பற்றி எழதுவதில்லை. அல்லது எழுதுவோர் குறைவு.ஆனால் பிராமணரல்லாதவர்களுக்கு அவற்றை நன்கறிந்து விமர்சிக்க (அல்லது போற்ற‌) தாங்கமுடியா ஆர்வமிருக்கிறது. குறிப்பாக சிலரைச் சொல்லலாம்.  எழுத்தாளர்களில் ஜெயகாந்தன்; இயக்குனர்களில் பாரதிராஜா.  பாலச்சந்தர்.

ஓர் எழுத்தாளனின் முதல் நிலைக்களம் அவன் பிறந்து வாழ்ந்த சூழலும் அண்டைச்சமூகமும்.. அதுதான் அவனுக்கு ஒரு நல்ல கருவி. அவன் ஆழ்மனத்தோடு எப்போதும் உறவாடுவது. அங்கே உண்மையான ஈடுபாட்டோடு எழுத முடியும்.  மாறாக, அவன் பிறந்து வாழாத‌  இன்னொரு நிலைக்களத்தை எடுக்கும்போது, அதை இவன் அச்சுமூகத்தோடு உறாவாடினானோ? அல்லது வெளியிலிருந்து பார்த்து மையல் கொண்டானோ? என்ற கேள்விகளை எழுப்பும். ஜெயகாந்தனைப் பொறுத்தவரை இரண்டாவதே பொருந்தும்.  கடலூர்தான் ஜெயகாந்தன் பிறந்து வளர்ந்த ஊர்.  கதை அங்குதான் நிகழ்கிறது.  ஆனாலும் கடலூர் மக்களின் வாழ்க்கையைக் காட்டுவதாக இல்லாமல் பொதுவாக எங்கும் நிகழும் பிராமண வாழ்க்கையை காட்டுகிறார்.  கதையில் வரும் பாட்டி - கடலூரில் வாழ்ந்தாலென்ன? சென்னை மாம்பலத்தில் வாழ்ந்தாலென்ன? ஒரே மாதிரியான வாழ்க்கைதான் பிராமணர்களுக்கு.

பிராமண கதாமாந்தர்கள் என்றால் ஒரு மோகம் போலும். பிராமணீயத்தை பிராமணர்களே அழுத்தமாக நினைக்காமலிருக்க மற்றவர்களுக்கு இருக்கக் காரணம்? பிராமண‌ ஆசாரம், மடி என்று வரும்போது, அவற்றை கேள்விக்குறிகளாக்கும் ''புரட்சி'' பண்ணும்போது ஓர் அட்டகாசமான கதையை உருவாக்க முடியும்.  அதை பிராமண கதாமாந்தர்களை வைத்தே செய்யும்போது பலர் வித்தியாசமாக இருக்கிறதே என்ற பரபரப்பை உருவாக்க முடியும். பரபரப்புக்காக பிராமண மையக்கதைகள் என்பது என் முடிபு.  அதில் வெற்றியும் கண்டுவிட்டார்.  இவ்வகையில் எ.கா: சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல். யுக சந்தி, அக்னிப்பரீட்சை போன்ற சிறுகதைகள் பிரபலம். இவை பிராமண வாழ்க்கை-நெறி தவறுவது அல்லது வழுக்கல்கள் பற்றியே அரக்கபரக்க பேசுகின்றன‌. ஆனால் பிற ஜாதியினரின் வாழ்க்கை மரபுகளை இவர் கதைகள் எடுத்துப் பேசியிருந்தால்பெருமாள் முருகன். சுஜாதா போன்றோருக்கு நேர்ந்த கதியே ஏற்பட்டிருக்கும்.  மாதொரு பாகன்’' கவுண்டர்களாலும் ';இரத்தம் ஒரே நிறம்;' நாடார்களாலும் எதிர்க்கப்பட்டன.  இரு நாவல்களுமே நிறுத்தப்பட்டன. பிராமண வாழ்க்கை;  இல்லாவிட்டால், தலித்துகளின் வாழ்க்கை (சினிமாவுக்குப் போன சித்தாளு குறுநாவலில் தலித்துகளே கதாமாந்தர்கள்.)- எழுதினால் கேட்பதற்கு நாதி கிடையாது.

இச்சிறுகதையின் தமிழ்நடையில் என்னால் ஒன்றுபட முடியவில்லை. பிராமணர்களின் வாழ்க்கையோடு வடமொழி ஊறியது. அன்றாட குடும்ப உரையாடல்களில் வடமொழிச் சொற்கள் பரம்பரை பரம்பரையாக விரவிக்கிடப்பது.  மற்றவர்கள் தண்ணீர் கொண்டுவா என்றால், இவர்கள் ஜலம் கொண்டுவா என்பார்கள். இப்பிராமண குடும்பக்கதையில் நாம் என்ன நினைப்போம்? பிராமண‌ கதாமாந்தர்களின் உரையாடல்களில் சமஸ்கிருதச் சொற்கள் ஓரளவுக்காவது நிரம்பியிருக்குமென்று.  ஆனால் ஒரேயொரு சொல் தவிர வேறில்லை. பாட்டியின் பேச்சில் வரும் ''அச்சான்யம்'' என்ற சொல்லும் பெயர்த்தி கீதாவின் மடலில் வரும் ''முகாலோபனம்'' என்ற சொல்லையும் தவிர.  ஆசிரியரே வடமொழிச்சொற்களை உள்ளுழைய விடுகிறார் வருமாறு: யுகம், ஸ்தூலம்; பிரசன்னம்; ஸ்படிகம்; ஆத்மார்த்தமாக; அத்யந்த சோகம்; உபாத்யாயை பயிற்சி; வைதயம்; ஜீவிதம்; விகஸித்தாள்; பூடகம்; நிர்த்தாட்சண்யம்; தூஷனை.  இவைகளுக்கீடான தமிழ்ச்சொற்கள் இல்லையா? அவை கதையைக் கெடுத்துவிடுமா? எதார்த்தத்துக்கு இடைஞ்சலாகிவிடுமா? இச்சொற்கள் கதாமாந்தர்கள் உரையாடலகளில் தோன்றியிருந்தால் மெத்தவும் சரி.  எதார்த்தத்துக்காக சரி.  நம்மை ஒன்றுபட வைக்க உதவும்.

கீதா தன் பெற்றோருக்கு எழுதும் மடல்: இப்படி செந்தமிழாக இருக்குமா? எக்குழந்தை பெற்றொருக்கு இப்படி எழுதும்வெள்ளரிப்பிஞ்சுகள்.  ஆனால் பாட்டி நாவிதனுக்கும் தன் சிறு பெயர்த்தி ஜானாவுக்கு கொடுப்பதும் வெள்ளிரிப்பிஞ்சுகள்..

இச்சிறுகதை மாந்தர்கள் -- கெளரிப் பாட்டி, அவரின் ஒரே மகன்  கணேசன் அய்யர். மனைவி பார்வதி  அம்மாள்;   ஆறு வயது பெண்குழந்தை ஜானா;  20 வயது மீனா,  விடலைப்பருவத்து பையனொருவன் அம்பிஅம்பி; அத்திம்பேர்; மன்னி என்பனவெல்லாம் பிராமண உறவுச் சொற்கள்.  குழந்தைக்குப் பெயரே அம்பியா? அல்லது கூப்பிடு பெயரா?

பாட்டியை பெரிய இடத்துக்குக் கொண்டு போய் வைக்கிறார்.  வழிப்பாதையில் நாவிதனைப்பார்த்து அவர் பேசும் பேச்சு  நம்ப முடியாதது.  நாவிதனை அத்தொழில் செய்வதே தப்பு என்றும்அவன் பிள்ளைகளை அத்தொழிலுக்கு வராமல் பார்த்துக்கொள் என்பதும்பாட்டியை உயரத்துக்கொண்டு போய் வைப்பதற்கு எழுத்தாளர் மெனக்கிடுவது தெரிகிறது.  ஆனால் எதார்த்தமாகாது.  சிறுகதைகளில் எதார்த்தங்களாக காட்சிகள் வடிக்கப்படும்போது கதை சிறப்படைகிறது..கற்பனைகளே கதைகள் என்றாலும் வாழ்க்கை பிரதிபலிப்புக்கள். தன் தொழிலை விருப்பமில்லாமல் செய்பவனிடம் பேசலாம் அல்லது வருமானத்தைக்காட்டி பேசலாம்.  ஒன்றுமே இல்லை. உன் மகனை உன்னை மாதிரி தகரப்பெட்டியைத் தூக்க வைக்காதே என்பது அத்தொழிலைச் செய்யவிடாதே என்பதா? இல்லை, ஓரிடத்தில் நிலையாய் இருந்து செய்ய வை!’ என்பதாஅத்தொழிலே இழிதொழில் அந்த இழிவு உன் மகனுக்கு வராதபடி பார்த்துக்கொள் என்று சொல்வதாகத்தான் தோன்றுகிறது.  வேலாயுதமும் (இதுதான் நாவிதனின் பெயர்) என்னைப் போலத்தான் நினைத்திருப்பான்.  அவனுக்கு அது பழகிப்போயிருக்கும்.

பாட்டியை விதவையாக‌ அறிமுகப்படுத்தும் போது - கதையே அவ்வறிமுகத்தில்தான் தொடங்குகிறது -  சிற்பி கவனமாகச் செதுக்குவதைப் போல செதுக்குகிறார். அப்போதே எனக்குத் தோன்றியது: இவளை வைத்து விளையாடப்போகிறாரென்று. என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. பாட்டியின் பெயர்த்தியும் விதவை.  அவள் மறுமணம் செய்வதுதான் அப்புரட்சி.  அதைக் கேட்டு குடும்பமே அதிர்கிறது. பாட்டியைத்தவிர. தாயும் தகப்பனும் அதிர்ந்தால் சரி.  அவர்கள் குழ்ந்தைகளுமா அதிர்ச்சியடைகின்றன? அவர்களுக்கு விடலைப்பருவத்திலேயே ஆசாரங்களைக் காக்க வேண்டுமென்று தோன்றிவிட்டதாஅவர்களை இக்காலத்து இளைஞர்களாக சற்றுமுன் காட்டியதை மறந்துவிடுகிறார்!  20 தே வயதான‌ மீனாவின் முகம் அருவெறுப்பால் சுளித்தது. அம்பியின் முகம் விளக்கெண்ணய் குடித்தது போலானது என்கிறார் ஆசிரியர்.  அதாவது அவர்கள் 30 வயது விதவை அக்காள் மறுமணம் செய்யப்போகும்  விசயத்தை தெரிந்த்வுடன் அதிர்ச்சியால் இப்படி ஆகிறார்கள்.  20 வயதிலிருந்தே குடும்பங்களில் ஆசாரக்காவலர்கள் உருவாகிறார்கள் என்கிறார்.  மறுமணத்தில் மட்டும்தான் ஆசாரம் வந்து தடுக்கிறது;  இவர்கள் இருவரும் மாட்னி ஷோ போவதும் இக்கால இளைஞர்கள் போல வாழ்வதிலும் இவர்கள் அக்காள் பிராமண விதவைக்கோலத்தில் இல்லாமல், நல்ல கலர்கலரான சேலையுடுத்தி, ஆசிரியைப் பயிற்சி பெற்று வேலைக்குச் சென்று இன்னொரு ஊரில் தன்னந்தனியாக வாழ்வதும் இவ்விரு ஆசாரக்காவலர்களுக்கு ஆசாரப்பங்கங்களாகப் படவில்லை!   நகைமுரண்!!


இறுதியில் பாட்டி இங்கிருக்கும் மூன்று குழந்தைகள் வேண்டாம் (அவர்கள் ஆசாரமோ?)  தன் மகன்-மருமகள் வேண்டாம் (இது சரி - ஆசாரமானவர்களல்லவா? விட்டு ஓடிவிடவேண்டும் !)  தன் பெயர்த்தியின் விதவை மறுமணம் நன்று.. அவளுக்குத் துணை வேண்டும்  என்று போய்விடுவது கதை முடிவு.


விதவை மறுமணத்தை ஆதரிக்க இன்னும் கொஞ்சம் எதார்த்தமாக‌ சித்தரித்து கொஞ்சம் பொருத்தமான கதாபாத்திரங்களையும் செயல்களையும் காட்டி உணர்வுப்பூர்வமான நடையில் எழுதியிருக்கலாம். நம் தமிழ் பெண் எழுத்தாளர்களில் சிலர் உணர்ச்சிப்பூர்வமாக. நன்றாக எழுதியிருப்பார்கள்.  இது பெண்ணியம் சார்ந்த கதை.  பெண்கள் எழுதும்போது இப்படிப் பட்ட கதைக்கருக்கள் உயிர்பெற்று நம்மை ஆழ்த்தும் வலிமை பெறுகின்றன.  பாம்பின் கால் பாம்பறியும் ஆணுக்கு இளம்விதவையின் மறுமணம் கைதட்டல்களை வாங்கித்தரும் ''புரட்சி'' மட்டுமே.  பெண்ணுக்கு வாழ்க்கைப்போராட்டம் . பசியை தத்துவ ரீதியாக பார்க்க முடியாது.  பட்டறிவால் மட்டுமே உணர முடியும்.

கதையில் ஒன்றேயொன்று என் கவனைத்தை மிகவும் ஈர்த்தது.. தன் மகனின் தாயன்பு தான் ஒழுகும் ஆசாரத்திற்காக மட்டுமே - ஆசாரத்தைக் கட்டிக்காத்து வருவதானால் தன்னை ஆசாரங்களின் உருவமாக - வெற்றிகரமான அடையாளச்சின்னமாக - எடுத்தபடியால் அன்பு காட்டுகிறான்  - என பாட்டிக்குத் தோன்றுகிறது.  தான் ஆசாரமில்லாமல் புரட்சி செய்திருந்தால் - இளம் வயது விதவையாக இருக்கும்போது தன் உணர்ச்சிகளுக்கு வேறொருவனைத் தேடியிருந்தால்?- அல்லது வாழ்க்கைத் துணையாக்கியிருந்தால்? - மகன் தன்னை விட்டு போய் விட்டிருப்பான என நினைக்கிறாள்.  தாய்மீது காட்டும் பரிவிலும் - அதுவும் வயதான் தாய் மீது காட்டும் அன்பில், மகன்கள் இலாப-நட்டம் உண்டோ?   உண்டு என்கிறது இச்சிறுகதை. அவ்வளவு கொடூரமானவனா ஒரு பிராமண மகன் என்ற கேள்வியை எழுப்புகிறது.  நல்ல வேளை கற்பனை J

‘’கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்’’ என்றார் கருநாநிதி.  அதாவது.  நெடுநாளைக்குப்பின் திரும்பி வந்தவன் தனக்கு என்ன கொண்டுவந்தான் என பிற உறவுகள் (தாரம், உடன்பிறந்தோர்) ஆலாப்பறக்க -  தாயோ, உடல் இளைத்திருக்கிறானே என கவலை கொண்டு விசாரிப்பாள்.  இதுதான் கருநாநிதி காட்டும் தாயன்பு. இதுவே ஒரு மகனுக்கும் உண்டு. ம்கனின் தாய்ப்பாசத்துக்கு விலையில்லை.  ஆனால் இங்கே ஜெயகாந்தன் பேசும் விலை - ஆசாரங்களும் அவற்றைக் காத்தொழுகுதலும் !

இன்னொன்றும் உறுத்துகிறது.   ஆசாரங்கள் பலபல.  அவற்றையொழுகும்போது சில வலியைத் தரலாம்இளம் விதவைகளை மறுமணம் செய்ய விடாமல்ஆசாரத்துக்குள் அடைப்பது அதிலொன்று.  ஓர் குடும்பத்துக்கு மட்டும் வலியைத்தரும்..  அதே சமயம், சில ஆசாரங்கள் பிராமணர்கள் ஒழுகும்போது பிறருக்கு வலியைத் தரும்.  அதிலொன்றை இக்கதையும் காட்டுகிறது.  பாட்டி-நாவிதன் நேர்முகம் பற்றிய வரிகளை திரும்பிப்பாருங்கள். 
"பாலத்தின்மீது கிராதியின் ஓரமாக, பாட்டியம்மாள் மீது பட்டுவிடக்கூடாதே என்ற பய உணர்வோடு ஒதுங்கி நின்று....கும்பிட்டான் நாவிதன்''
''இரண்டு வெள்ளிரிப்பிஞ்சுகளை அவன் ஏந்திய கைகளில் போட்டாள்''

எப்பெண்ணானாலும் சரிமேல் பட்டுவிடக்கூடாதேயென என்ற உணர்வுக்குப் பெயர் மரியாதை.  அதே ஆணின் மீது தீண்டலாகிவிடக்கூடாதே என்று ஓர் பெண் நினைத்தால் (வயதானவர் இல்லை; மற்ற பெண்கள்) அதன் பெயர் பயிர்ப்பு.  ஆணோ, பெண்ணொ, இங்கே பயம் வேண்டாவுணர்வு. இங்கே இவனுக்கு ஏன் பயம் வருகிறதுநந்தனார் சிதம்பரத்துக்குள் நுழையும்போது எங்கும் வேதவொலி கேட்க, பயந்து நடுங்கினார் எனத் தொடக்கத்தில் சொல்கிறார் சேக்கிழார்..

‘’நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்
பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார்.

 ‘’செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து
பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெரும் இடையோதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்’’

தீண்டாமை பல உளவிளைவுகளை உருவாக்கும். அதில் பெரும்சுமையானது இப்பயவுணர்வுதன் பிறப்பை நினைந்துநினைந்து வருந்துவது..

கொடுப்பது வேறு. ஏந்திய கரங்களில்  ‘போடுவது வேறு.  ஆக இங்கு தீண்டாமை பேணப்படுகிறது என்று காட்டுகிறார்.  பாரதியார், தன் ''மலையாளம்'' என்ற தலைப்பிலுள்ள கட்டுரையில்நம்பூதிரிகள் ஒரு கம்பைக் கொண்டுபோகும்போது, அதன் மறுமுனை ஒரு தலித்தொருவனின் மேல் பட்டுவிட்டால் கூட அக்கம்பின் வழியாக தங்கள் பிராமண புனிதம் கெட்டுவிட்டது என்று கருதுவார்களாம் !  தீண்டாமையை கடைபிடிப்போருக்கு எம்பதி உணர்வு அப்போது கிடையாது.   பிறர்தானே? தன் பெயர்த்திக்கு ஒரு மனவலி என்னும்போது எம்பதி உருவாகிறது பாட்டிக்கு.  அதைப்பல வரிகளில் காட்டுகிறார்.

பாட்டியின் முற்போக்கு புரட்சி எல்லா ஆசாரங்களையும் உடைப்பதாக இல்லை. அனைத்தையும் ஏற்று ஆசாரங்களில் பிரதிபலிப்பாகவே மகிழ்ச்சியாகவே வாழ்கிறாள். அதில் தீண்டாமை இன்னபிற‌ கட்டாயமாக இருக்கும்.  விதவை மறுமணத்தைக் கூட அவள் தன் மகன் குடும்பம் போலவே மறுத்திருப்பாள். ஆனால் தான் இளம் வயதில் விதவையானதால், தனக்கு அவ்வலி தெரிந்ததால் மட்டுமே விதவை மறுமணம் செய்தல் கூடாது என்ற ஆசாரத்தை வீசுகிறார். மற்றவரையும் செய்யச்சொல்கிறாள். இது புரட்சியாதன்னலத்தில் செலக்டிவ் ஆக  ஓர் ஆசாரத்தை விடுவது; மற்றவைகளை ஏற்று மகிழ்வது ? பாட்டியை முற்போக்கு சிகரமென்று புகழலாமாபுகழ நம்மை நினைக்க வைக்க‌ முயன்ற ஆசிரியர் தன்னை அறியாமலேயே ‘'போட்டுக்கொடுத்து' விட்டாரோ?

யுகசந்தி என்பது தலைப்பு.   இரு யுகங்கள் சந்திப்பதாக முடிக்கிறார்.  ஆசாரங்களைக் கடைபிடிக்கும் பாட்டி விதவையான போது இருந்த யுகம்.  அவளது பெயர்த்தி கீதா விதவையாகி பின்னர் மணம் செய்யும் இக்கால யுகம்.  இவை உண்மையில் சந்திக்கின்றனவா என்றால் இல்லை.  விதவை கீதா ஆசாரத்தை மட்டும் மீறவில்லை. தன் குடும்ப நபர்கள் அனைவரின் (பாட்டியைத்தவிர) விருப்பங்களையும் மீறுகிறாள்.  "முடிந்தால் ஆசிர்வாதம் பண்ணுங்கோ; இல்லாவிட்டால் போங்கோ!" என முடியும் மடலது.  என்ன தெரிகிறதுஅந்த யுகமும் இந்த யுகமும் மாறாமலே இருக்கின்றனபாட்டியின் காலத்திலும் விதவை மறுமணம் எதிர்க்கப்பட்டது. இக்காலத்திலும் (கதையில்) எதிர்க்கப்படுகிறது  வெவ்வேறு இரு யுகங்களை இக்கதை காட்டவில்லை. இக்கதை  பாட்டி மட்டும் ஒரு தோப்பில் தனிமரம்.  தனிமரம் தோப்பாகாது. பாட்டி ஒரு யுகமாக மாட்டார். அதாவது முற்போக்கு யுகமாக.  ஒரே மாதிரியான யுகஙகள் சந்திக்க முடியா. நேர்கோடுகள் சந்திக்குமா?.  யுக சந்தி இங்கில்லை.
                                                                        

                                                                        *****